Thursday, April 21, 2011

சிதைவு (2)


எங்கு போனது எனது சந்தோஷங்கள்?
எப்போதுமில்லாத அளவுக்கு
சூழலின் நெருக்கடிகள்
நெஞ்சை நெருக்குகின்றன.
வீடு, காதல், வேலை, எதிர்காலம் என
அனைத்துவகையிலுமான ஒரு பயத்தில்
கூனிக்குறுகிக்கொண்டிருக்கிறது
வாழ்நாட்கள்.
எங்கு போனது எனது சந்தோஷங்கள்?
எதனால் இப்படி ஆனது வாழ்வு?
பூவின்மேல் போய் அமரும்
வண்ணத்துப்பூச்சியைப்போல
ஆறுதல் தேடி அலையும் மனசுக்கு
ஒரு இடம் இல்லை இங்கு.
அன்பாக பேசவோ
குறைந்தபட்சம் ஒரு புன்னகை புரியவோகூட
ஒருவரும் இல்லாதமாதிரியாகிவிட்டது.
தோளில்கைபோட்டு
கண்ணீரை சொல்லி நடக்க
நெருங்கிய நண்பன் கூட
தொலைதூரத்தில் இருக்கிறான்.
ஆறுதலாய் இருந்த
தோழியின் நட்பிலும்
விழுந்துவிட்டது ஒரு இடைவெளி.
கடந்துவந்த இத்தனை காலத்திலும்
சொல்லிக்கொள்ளும்படியாக
ஒரு நிகழ்வுகளும் இல்லை இதுவரையில்.
இனியாவது நிகழுமா
மீதமிருக்கிற வாழ்வும்
இப்படியேதான் கடக்குமா...?

10.05.1997

No comments:

Post a Comment